July 14, 2010

வேறு வேறு திசையில் ....

வடுகபட்டி யும் பண்ணைபுரமும் பிரிந்த காதை ...
வைரமுத்து வரிகளில் ..........................
இசை ஞானியே..!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும்
என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும்
என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத்
தொடங்கி வைத்தவனே!
தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல
என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.
மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்...
மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்...
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்...

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.
ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்;
நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.
பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து,
தூசு தட்டி, வாசிப்பது போல்
உன் தூசுகளைத் துடைத்துவிட்டு
உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு
ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில்
இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.
என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.
உன்னை நானும் பார்க்கிறேன்.
தூண்டிலில் சிக்கிய மீனாய்த்
தொண்டையில் ஏதோ தவிக்கிறது.
வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம் தடுக்கிறது;
வந்துவிட்டேன்.
அன்று...
இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள்
என்னைத் தூங்கவிடவில்லை.
உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.
ஒரே வருஷத்தில்
சூரியனை என் பக்கம் திருப்பிச்
சுள்ளென்று அடிக்க வைத்தாய்...
இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்...
என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்...
நீதான்... அந்த நீதான்
ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.
ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.
பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.
நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே!
அதை நினைத்தேன்...
நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே!
அதை நினைத்தேன்...
உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்...

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில்
உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே..!
இப்போது சொல்கிறேன்...

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில்
கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.
உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.
நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை"
சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.
மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.
இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.
நீயும் நானும் சேர வேண்டுமாம்.
சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.
மழை வந்தது.
நின்று விட்டேன்.
என்னை நீ பிடித்து விட்டாய்.அப்போது சேர்ந்து விட்டோம்.
ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.
இப்போது முடியுமா..?
இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்???